Friday, 3 July 2015

Day 09 - 03-07-2015

காத்திருக்க நேரமில்லை... காதலிலே!

"அஅஅ... ஏம்பா... ரெண்டு இட்லி குடேன்..?..." என்று தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும்தான் ஐயாச்சாமி ஐயா சென்று கொண்டிருந்த வெயிட்டரிடம் கேட்டார்.

"Sorry Sir. இது Self Service hotel. Token அங்க வாங்கனும்." என்று கல்லாவை நோக்கி கைகாண்பித்து விட்டு சென்றுவிட்டார் வெயிட்டர் மணி.

"சே..."

சேரிப்பா என்று சொல்லுவதற்குள்ளாகவே தண்ணீர் குவளைகளை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் மணி. மரியாதை தெரியாதவர் ஒன்றுமல்ல ஆனால் அவரின் வேலை தண்ணீரை ஏந்திகளில் நிரப்புவதுதான். இரவு எட்டு மணி என்பது கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் தருணம் ஆகும். "இந்திரா கஃபே", வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் இருப்பதால்ஆரம்பித்த சிறிது காலத்தில் எல்லாம் அமோக வரவேற்ப்பை பெற்று விட்டது. பன்னாட்டு நிறுவன தொழிலாளிகளும் பல ஊர்களில், மாநிலங்களில் இருந்து வந்து குவிவது வேளச்சேரி போன்ற ஒரு இடத்தில்தான். அடையாறு போல் அருமையான அமைப்பும் அல்லல் பட வைக்கும் வாடகையும் இருக்காது அதே சமயம் மேடவாக்கம் போல் குறைந்த வாடகையும் நிறைந்த அல்லல்களும் இருக்காது. ஒரு நடுத்தர வர்க்கம் வாழ சரியான இடம் ஆதலால் அப்படித்தான் கூட்டமும் வழியும். எவருக்கும் எவருடனும் நின்று பேச நேரமிராது.

மேசையின் மீது தான் வைத்த கைப்பையை எடுத்த ஐயாச்சாமி ஐயாவின் வலது கை நடுங்கிற்று. அந்த நடுக்கங்களுக்கு நடுவே அந்தப் பையை 2 நிமிட போராட்டங்களுக்குப் பிறகு ஒருவாறாக எடுத்துவிட்டார் ஐயாச்சாமி. உண்மையில் அந்த 2 நிமிடங்களுக்குள் அவரது கைக்கும் பைக்கும் ஏற்பட்ட போராட்த்தைவிட அவரது மனதுக்கும் காலத்துக்கும் ஏற்பட்ட போராட்டமே பெரியதாகும். புதுக்கோட்டையை அடுத்துவுள்ள அன்னவாசலின் அருகே இன்னும் பல மனிதர்கள் ஐயாச்சாமியின் பெயரைக்கேட்டாலே நடுங்குவார்கள். ஆசிரியர் ஐயாச்சாமி என்றால் சில மாணவர்கள் வாயைக்கூட திறக்க அஞ்சுவார்கள். இன்று கிண்ணங்களை எடுக்க நடுக்கத்துடன் தள்ளாடும் அவரின் கைகள் அன்று வெடுக்கென்று பாய்ந்துவிடும், மாணவர்களின் கன்னங்கள் மீது. கைப்பையை எடுத்துக்கொண்டு கவுண்டரை (சாதிகள் இல்லையடி பாப்பா...) வந்தடைந்தார். ரெண்டு இட்லி, ஒரு காஃபியென கராராக சொன்னார் ஐயா.


"முப்பது ரூபாய் சார்" என்றார் அச்"சீட்டு"க்கருவியில் இருந்து டோக்கனை கிழித்தபடியே கவுண்டரில் இருந்த சரவணன். சரவணன் 2008 ஆம் ஆண்டு பொறியியல் முடித்த எண்ணற்ற பட்டதாரிகளில் ஒருவர். எங்கோ இருந்த வங்கிகள் மூடப்பட்டதால், எவருக்கோ எவரோ கொடுக்க வேண்டிய பணம் வராததால், ஏதோவொரு அலுவலகம் மூடப்படதால், பாவம்! வேலை கிடைத்துவிட்டது என்று கல்லூரியை விட்டு நம்பிக்கையுடன் வந்த சரவணனுக்கு கடைசிவரை வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு மட்டும் வந்து சேரவேயில்லை. "இஞ்சினீயரிங் படிச்சு என்னத்தை கிழிச்ச, நீ?" என்று அப்பா கேட்டதால் வந்துவிட்டார் அவரும்... டோக்கணை கிழிக்க!


Add caption


"சார், சில்லறையா குடுங்களேன்..." என்றார் சரவணன், ஐயாச்சாமி நீட்டிய ஐம்பது ரூபாய் நோட்டுக்கு பதிலாக. சில்லறை கொடுக்க வேண்டுமென்று தெரியாமல் இல்லை ஆசிரியர் ஐயாவிற்கு இருப்பினும் அந்த தள்ளாத வயசில் நில்லாத நடுக்கத்தினூடே மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை சரியாக எண்ணி எடுப்பது எவ்வளவு கடினம் என்று அவருக்குத்தான் தெரியும். ஆகையால் அவர் எடுக்கவில்லை. பிறகு மெதுவாக மூன்று நோட்டுகளை இடதுகையால் எடுத்துக்கொடுத்தார் ஐயா, இரண்டொரு நோட்டுகளை கீழே தவறவிட்ட படியே. டோக்கன் சீட்டையும் தனது ரூபாய் நோட்டையும் எடுத்துக் கொண்ட ஐயா பிறகு மெதுவாக சென்று கவுண்டரில் இருந்த வரிசையில் வந்து நின்றார். அவர் கேட்ட இரண்டு இட்லிகளும், புதினா மற்றும் தேங்காய் சட்னிகளும் சாம்பாருடன் தட்டில் கொடுக்கப்பட்டது. 

மஞ்சள்தட்டில் வெள்ளை இட்லிகளும், பச்சை வெள்ளையென இரண்டு சட்னிகளும். மென்சிவப்பு நிறத்திலிருந்த சாம்பாரும் பார்ப்பதற்கு அருமையாகவே இருந்தது. பார்ப்பவரை உடனே உண்ணத்தூண்டும் வகையில்தான் இருந்தன அவை. ஏனோ ஐயாவிற்கு மட்டும் அதை பார்த்ததும் உண்ணத்தோணவில்லை. காலம் சென்ற கமலத்தின் நினைவுதான் வந்தது. கமலம் அம்மாளும் ஐயாச்சாமியும் காதல் மனம் முடித்தவர்கள். 1949ல் திருச்சியில் நடந்த அவர்களின் சுயமரியாதை திருமணம்.  குடும்ப நண்பரான கமலத்தின் தந்தையின் வீட்டில் இருந்துதான் இருபது வயதான ஐயா, அப்பொழுது புனித வளனார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஐயாச்சாமியைத்தான் மணம் முடிப்பேன் என்று மொட்டைமாடியில் இருந்து கமலம் கத்தியது எல்லாம் வேறுகதை! 60 வருட காதல் வாழ்க்கைக்குப் பிறகு  கமலம் ஐயாச்சாமியை தனியாக விட்டுவிட்டு சென்றாள். கடந்த 5 வருடங்களாக எப்பொழுது இதுபோன்ற நல்ல இட்லிகளை கண்டாலும் ஐயாச்சாமிக்கு கண்களில் கண்ணீர் மல்கிவிடும், கமலத்திற்கு பிடித்த இட்லிகள் என்று. அவரின் உள்ள நடுக்கத்தால் கண்களில் இருந்து காதல் நீர் சொட்டியது உடல் நடுக்கத்தால் தட்டிலிருந்த சாம்பார் கொட்டியது. இருக்கையில் வந்தமர்ந்தவர் மேலும் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு இட்லியை எடுக்கலானார். ஒரு துண்டு இட்லியை கமலத்திற்கென ஒதுக்கி வைத்தார். சினிமாத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் தோன்றும் அவரின் செயல்களைக் கண்டால். ஆனால் 60 வருடமாக ஒன்றாகவே உண்டு வந்த அவருக்கு அது அவரின் பழக்கமாகிவிட்டது. மணம் முடித்த சிறுது காலத்தில் தனிக்குடித்தனம் சென்றார்கள் வேலையின் காரணமாக. பள்ளிப்படிப்பு மட்டுமே முட்த்து 17 வயதே ஆன கமலத்திற்கு நன்றாக சமைக்கவும் வராது வீட்டு வேலைகளும் செய்ய வராது. இருவரும் சேர்ந்துதான் அனைத்தையும் செய்வார்கள். ஐயாச்சாமி தனது ஆசிரியர் பணியை சமையலறையிலும் செவ்வென செய்வார். பாத்திரங்கள் கழுவ சோம்பல் பட்டுக்கொண்டு ஒரே தட்டில் ஒன்றாக உண்பார்கள் கமலமும் ஐயாச்சாமியும். தாயைப் போல் கமலம் அவரை பார்த்துக்கொண்டாளோ என்னவோ அதைப்பற்றியெல்லாம் ஐயாச்சாமி நினைத்ததேயில்லை. ஆனால் தினமும் கமலம் தனது தந்தையைவிட ஐயாச்சாமி தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதாக கூறுவாள். 



இட்லியை அசைபோடுவது போல் பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும் ஐயாச்சாமிக்கு மட்டும்தான் தெரியும் அவர் அசைபோடுவது எல்லாம் முடிந்த காலத்தைப்பற்றியே என்று. இட்லியை மென்று தின்றுவிட்டு மெதுவாக எழுந்த ஐயாச்சாமி கைகழுவும் இடத்தைநோக்கி நடந்தார். தன்னை முந்திக்கொண்டு ஒரு சிறுமி சென்று கையைக் கழுவினால். அக்குழந்தையில் கமலத்தையே கண்ட ஐயா நிம்மதியடைந்தார். கைகளைக் கழுவி விட்டு வந்து காஃபி கவுண்டரில் சீட்டைக் கொடுத்து காஃபியை வாங்கினார். இவரின் வயதையும் நடுக்கத்தையும் கண்ட அன்ஷு குப்தா டம்ளரில் அளவாகவும் டவராவில் அதிகமாகவும் காஃபியைக் கொடுத்தார். ஒரு சிறு புன்னகையை அன்ஷுவிற்கு அன்பளித்துவிட்டு வந்து அமர்ந்தார் ஐயா. நடுக்கத்துடனே காஃபியைக் குடித்துவிட்டு ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டார் ஐயா. அதன் அர்த்தம் அவரே அறிவார். பிறகு மெதுவாக எழுந்து தன் கைப்பையை எடுத்துக்கொண்டு நடக்கத்துவங்கிய ஐயாவிற்கு அப்பொழுதுதான் தோன்றியது இது அன்னவாசல் அல்லவென்றும் தன் மகன் வசிக்கும் சென்னையில் தன் உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும். அப்படி நினைத்த மறுகணம் அவரின் இதழோரத்தில் ஒரு ஏளனப்புன்னகை வந்து சென்றது. உன் உயிரே சென்றபின் உன் உடமைகள் உனக்கெதற்கு என்று அவரின் மனசாட்சி செய்த ஏளனம்தான் அது. 

அக்கடையின் படியைவிட்டு கீழே இறங்குவதை விட துணையில்லா வாழ்வை நடத்துவது அவருக்குக் கடினமாக இருந்தது. ரோட்டின் ஓரம் நேராக சென்றாலும் அவரின் மனம் மட்டும் 60 வருடங்களில் எங்கோ ஒரு இடத்திற்கு தவ்வி தவ்வி சென்று கொண்டேயிருந்தது. வேளச்சேரியன் குறுகிய சாலையில் நடப்பவர்களை இருப்பதாகவே மதிக்காத ஆட்டோவொன்றில் இருந்து "யோ... பெரிசு போய் சேந்திராத. பாத்துப்போ" என்று சத்தம் மட்டும் வந்தது. இனியெங்கு நடப்பதென்று தெரியாத ஐயாச்சாமியின் மனசாட்சி சொல்லியது "அதுக்குத்தான் காத்துகிட்டு இருக்கேன்பா..."


No comments:

Post a Comment